அஸ்தினபுரியின் மீது நெருப்பு பொறி வந்து விழுகிறது. ஏன்… எதனால்.. காதலினாலா? காமத்தினாலா? துரோகமா? சினமா? அல்லது மண்ணாசையா? எதன் பொருட்டு கனல் அஸ்தினபுரியை அவியாக்கிக் கொள்ள எண்ணுகிறது? ஒரு அநீதியான அரசியல் செயல்பாடுதான் இதன் தொடக்கம். அது தனிமனிதரொருவரின் கடமையுணர்விலிருந்து உருவானதா? தந்தையின் மீதான அவரின் பெருவிருப்பத்தாலா? அவ்விருப்பமே தந்தை இறந்து விட்ட போதிலும் அவரது ஆசை மனைவியான சின்னம்மையின் வாக்கை வேதமென்று கருத வைத்ததா? எதிர்காலத்தை கணிக்கும் ஆற்றல் அந்த பேரரசியிடம் உள்ளதென்று நம்பும் மனத்தை கொள்ள வைத்ததா? அல்லது தன் தந்தையின் நாடு தக்க வாரிசின்றி பிறிதொருவருக்கு உடமையாகி விட கூடாது என்ற தன்னுணர்வா? எந்த எண்ணம் அவரை வெற்றிக் கொண்டிருந்தாலும் அவர் மேற்கொண்ட நியாயமற்ற செயல்தான் இதன் முதற்சுழி.
தந்தையின் காமத்துக்காக தன் அரச நிலையையும் காமத்தையும் துறந்த பீஷ்மர் என்னும் பெருமனிதர் ஷத்திரிய நியாயத்தை கையிலேந்தி அதில் காசி நாட்டின் மூன்று இளவரசிகளை பலவந்தமாக அமர வைத்து நோயாளியான தங்கள் நாட்டு இளவரசனுக்கு மணமுடிப்பதற்காக சிறைப்பிடித்துக் கொண்டு வருகிறார். அஸ்தினபுரியின் ஸ்திரத்தன்மைக்காக அவரது சிற்றன்னையான சத்யவதியின் பின்களமாடலுக்கு செயல்வடிவம் கொடுக்க ஷத்திரிய தர்மம் அவரை அனுமதித்ததை போல அந்த அநீதியினுள் தொலைந்துப் போன மானுட தர்மம் அல்லது அறப்பிறழல் அவரை அனுமதிக்கவில்லை. அது எரிதழலென அஸ்தினபுரியின் மீது விழுகிறது. அதன் கதையைதான் முதற்கனல் பேசுகிறது. இதுவே பக்க எண்ணிக்கைகளாலும் கிளைக்கதைகளாலும் மூலக்கதையமைப்பாலும் பகவத்கீதை என்ற நெறிநுாலாலும் கட்டமைக்கப்படவிருக்கும் வெண்மையான முரசின் முதலாவதான நாவல்.